நமது நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும்
இக்காலத்திலும் நித்தியத்திலும், சிருஷ்டிப்பின் நோக்கமும் தேவனின் தன்மையும் நம் நன்மைக்காக அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவருவதாகும்.
இன்று ஏப்ரல் 6—இயேசு கிறிஸ்து தனது பிற்காலப் பரிசுத்தவான்களின் சபையை மறுஸ்தாபிதம் செய்ததன் ஆண்டுவிழா மற்றும் ஈஸ்டர் காலத்தின் ஒரு பகுதியை இயேசு கிறிஸ்துவின் பரிபூரண வாழ்க்கை, பாவநிவாரண பலி மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்து நாம் மகிழ்ச்சியுடன் சாட்சியமளிக்கிறோம்.
ஒரு மனிதனின் மகன் அழகான குதிரையைக் கண்டடைவது போல் சீனக் கதை தொடங்குகிறது.
“எவ்வளவு அதிர்ஷ்டம்,” என்று அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்.
“பார்க்கலாம்,” என்று அந்த மனிதன் கூறுகிறார்.
அப்போது மகன் குதிரையில் இருந்து தவறி விழுந்து நிரந்தரமாக காயமடைந்தான்.
“எவ்வளவு துரதிர்ஷ்டம்,” என்று அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்.
“பார்க்கலாம்,” என்று அந்த மனிதன் கூறுகிறார்.
படையெடுக்கும் இராணுவம் வருகிறது, ஆனால் காயமடைந்த மகனை அழைத்துச் செல்லவில்லை.
“எவ்வளவு அதிர்ஷ்டம்,” என்று அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்.
“பார்க்கலாம்,” என்று அந்த மனிதன் கூறுகிறார்.
இந்த நிலையற்ற உலகம் அடிக்கடி புயல் வீசுவதாகவும், நிச்சயமற்றதாகவும், சில சமயங்களில் அதிர்ஷ்டமாகவும்,—அடிக்கடி—துரதிர்ஷ்டவசமாகவும் உணர்கிறது. ஆனாலும், இந்த இன்னல்கள் நிறைந்த உலகில், “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” உண்மையில், நாம் நேர்மையாக நடந்து, நமது உடன்படிக்கைகளை நினைவுகூரும்போது, “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.”
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.
ஒரு விசேஷித்த வாக்குத்தத்தம். தேவனிடமிருந்து உறுதியான ஆறுதல்! ஒரு அற்புதமான வழியில், சிருஷ்டிப்பின் நோக்கமும், நம்முடைய பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இயல்பும், ஆரம்பத்தையும் முடிவையும் அறிவதாகும்; நமது நன்மைக்கான அனைத்தையும் கொண்டு வருவதற்கு; இயேசு கிறிஸ்துவின் கிருபை மற்றும் பாவநிவர்த்தி மூலம் நாம் பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்தவன்களாகும்போது நம்மை இரட்சித்து உயர்த்துவதாகும்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி நம்மை பாவத்திலிருந்து விடுவித்து மீட்கும். ஆனால் இயேசு கிறிஸ்து நமது ஒவ்வொரு வலி, துன்பம், சுகவீனம், துக்கம், பிரிவினை ஆகியவற்றை நெருக்கமாக புரிந்துகொள்கிறார். இக்காலத்திலும் நித்தியத்திலும், மரணம் மற்றும் நரகத்தின் மீதான அவரது வெற்றி எல்லாவற்றையும் சரி செய்யும். உடைந்த மற்றும் இழிநிலையிலுள்ளவர்களை குணப்படுத்தவும், கோபம் மற்றும் பிளவுபட்டவர்களை ஒப்புரவாக்கவும், தனிமையானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், நிச்சயமற்ற மற்றும் பூரணமற்றோரை ஊக்குவிக்கவும், தேவனால் மட்டுமே சாத்தியமான அற்புதங்களை வெளிப்படுத்தவும் அவர் உதவுகிறார்.
நாம் அல்லேலூயா பாடுகிறோம், ஓசன்னா என்று கத்துகிறோம்! நித்திய வல்லமை மற்றும் எல்லையற்ற நன்மையுடன், தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தில், எல்லாமே நம் நன்மைக்காக ஒன்றாகச் செயல்பட முடியும். பயப்படாமல் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும்.
தனிமையாக விடப்பட்டுவிட்டால், நம் சொந்த நன்மையை நாம் அறியாமல் இருக்கலாம். “நான் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது,” எனது சொந்த வரம்புகள், பலவீனங்கள், போதாமைகளையும் நான் தேர்ந்தெடுக்கிறேன். இறுதியில், மிகவும் நல்லது செய்ய, நாம் நன்றாக இருக்க வேண்டும். தேவனைத் தவிர யாரும் நல்லவர்கள் இல்லாததால், நாம் இயேசு கிறிஸ்துவில் பரிபூரணத்தை தேடுகிறோம். நாம் இயற்கையான ஆண் அல்லது பெண்ணை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுக்கு முன்பாக ஒரு குழந்தையாக மாறும்போது மட்டுமே நாம் உண்மையானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் மாறுகிறோம்.
தேவன் மீது நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும், சோதனைகள் மற்றும் துன்பங்களை நம் நன்மைக்காக அர்ப்பணிக்க முடியும். எகிப்தில் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு, பின்னர் தனது குடும்பத்தையும் மக்களையும் காப்பாற்றினான். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் லிபர்ட்டி சிறைவாசம், இந்த காரியங்கள் “உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும்” என கற்பித்தன. நாம் ஒருபோதும் தேர்ந்தெடுக்காத விசுவாசம், சோதனைகள் மற்றும் தியாகங்களுடன் வாழ்ந்தால், நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்க முடியும்.
நாம் நித்தியக் கண்ணோட்டத்தைப் பெறும்போது, எல்லாமே நம் நன்மைக்காக ஒன்றாகச் செயல்பட முடியும் என்று கர்த்தரில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கிறோம்; நமது சோதனைகள் “ஒரு சிறிய கணத்துக்காகவே” இருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறோம்; துன்பத்தை நமது ஆதாயத்திற்காக அர்ப்பணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறோம்; விபத்துக்கள், அகால மரணம், பலவீனப்படுத்தும் சுகவீனம் மற்றும் நோய் ஆகியவை பூலோக வாழ்வின் ஒரு பகுதியாகும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்; நமது அன்பான பரலோக பிதா தண்டிக்க அல்லது தீர்ப்பளிக்க சோதனைகளைக் கொடுப்பதில்லை என்று நம்புகிறோம். அவர் ரொட்டி கேட்கிறவனுக்கு கல்லையும், மீன் கேட்கிறவனுக்கு பாம்பையும் கொடுக்க மாட்டார்.
சோதனைகள் வரும்போது, நாம் மிகவும் விரும்புவது, யாராவது ஒருவர் செவிசாய்த்து நம்முடன் இருக்க வேண்டும் என்பதே. இருப்பினும் அவர்களின் நோக்கம் எவ்வளவு ஆறுதல்படுத்துவதாயிருந்தாலும் இந்த நேரத்தில், க்ளிஷே பதில்கள் உதவாது, சில சமயங்களில் நம்முடன் வருந்தி, வலித்து, அழுவோருக்காக நாம் ஏங்குகிறோம்; நம்மை வலி, விரக்தி, சில சமயங்களில் கோபத்தை கூட வெளிப்படுத்துவதற்கும்; நமக்குத் தெரியாத விஷயங்கள் உள்ளன என்பதை நம்முடன் ஒப்புக்கொள்ளுவுதற்கும் அனுமதிப்போருக்காக.
நாம் தேவனையும் அவர் நம்மீதுள்ள அன்பையும் நம்பும்போது, நம்முடைய மிகப்பெரிய மனவேதனைகள் கூட இறுதியில் நம் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
நான் நேசிப்பவர்கள் ஒரு கடுமையான கார் விபத்தில் சம்பந்தப்பட்டது பற்றிய செய்தி வந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில், வேதனையிலும் நம்பிக்கையிலும், யோபுவுடன் மட்டுமே சொல்ல முடியும், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.”
உலகளாவிய சபை முழுவதும், சுமார் 3,500 பிணையங்கள் மற்றும் சேகரங்கள் மற்றும் சுமார் 30,000 தொகுதிகள் மற்றும் கிளைகள் புயல்களில் இருந்து அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால் நமது பிணையங்கள் மற்றும் தொகுதிகளுக்குள், பல விசுவாசமுள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள், அதே சமயம் (இன்னும் எப்படி எனத் தெரியாமல்) விஷயங்கள் நமது நன்மைக்காக ஒன்றாகச் செயல்படும் என்பதை அறிந்தாலும் கூட கடினமான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள ஹடர்ஸ்பீல்டில், புதிய பிணையத் தலைவராக அழைக்கப்படுவதற்கு சற்று முன்பு சகோதரர் சாமுவேல் பிரிட்ஜ்ஸ்டாக் நான்காவது நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது கடுமையான நோயறிதலைக் கருத்தில் கொண்டு, அவர் தனது மனைவி அன்னாவிடம், தான் ஏன் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார்.
“ஏனென்றால், நீங்கள் பிணையத் தலைவராக அழைக்கப்படவிருக்கிறீர்கள்” என்று சகோதரி பிரிட்ஜ்ஸ்டாக் கூறினார்.
ஆரம்பத்தில் ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் வாழ நேரம் குறிக்கப்பட்டு, தலைவர் பிரிட்ஜ்ஸ்டாக் தனது நான்காவது ஆண்டு சேவையில் இருக்கிறார். அவருக்கு நல்ல மற்றும் கடினமான நாட்கள் உள்ளன. அதிகரித்த விசுவாசம், சேவை மற்றும் தயவுடன் அவரது பிணையம் அணிவகுத்து நிற்கிறது. இது எளிதானது அல்ல, ஆனால் அவருடைய மனைவியும் குடும்பத்தினரும் விசுவாசம், நன்றியுணர்வு மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய சோகத்துடன் இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலம் நித்திய மகிழ்ச்சியாக மாறும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
நாம் அமைதியாகவும், வெளிப்படையாகவும், பயபக்தியுடனும் இருக்கும்போது, கர்த்தர் வழங்கும் உடன்படிக்கையின் அழகு, நோக்கம் மற்றும் அமைதியை நாம் உணரலாம். பரிசுத்தமான தருணங்களில், நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பெரிய நித்திய எதார்த்தத்தைப் பார்க்க அவர் அனுமதிக்கலாம், அங்கு சிறிய மற்றும் எளிமையான விஷயங்கள், கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்களின் நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன.
எனது முதல் ஊழியத் தலைவரின் மகள் ரெபெக்கா, வேறொருவரின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் எதிர்பாராத வாய்ப்பின் மூலம் ஆறுதலுக்கான தனது ஜெபத்திற்கு கர்த்தர் எவ்வாறு பதிலளித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு மாலைப் பொழுதில், ரெபேக்கா, தன் தாய் அண்மையில் மரித்ததற்காக வருந்தினாள், அவள் காருக்கு பெட்ரோல் வாங்கச் செல்ல வேண்டும் என்ற தெளிவான எண்ணத்தை உணர்ந்தாள். அவள் பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வந்தபோது, ஒரு பெரிய ஆக்சிஜன் தொட்டியுடன் மூச்சு விடுவதில் சிரமப்படும் ஒரு வயதான பெண்மணியை அவள் சந்தித்தாள். பின்னர், ரெபெக்கா அந்த பெண்ணுக்கு தனது தாயின் சிறிய ஆக்ஸிஜன் இயந்திரத்தை கொடுக்க முடிந்தது. இந்த சகோதரி நன்றியுடன் கூறினார், “நீங்கள் என் சுதந்திரத்தை எனக்கு திரும்பக் கொடுத்திருக்கிறீர்கள்.” அவர் விரும்புவது போல் நாம் ஊழியம் செய்யும்போது காரியங்கள் நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன.
தனது ஆசிரியர் வயது மகனுடன் ஊழியத் தோழர்களாக நியமிக்கப்பட்ட ஒரு தகப்பன் விளக்கினார், “நம்பகமான நண்பர்களுக்கு பிஸ்கட்டுகளைக் கொண்டு வரும் அண்டை வீட்டாராக இருந்து, பிறகு ஆவிக்குரிய விதத்தில் முதலாவதாக பதிலளிப்பவர்களாக நாம் செல்வதுதான் ஊழியம்.” இயேசு கிறிஸ்துவில் உடன்படிக்கைக்கு சொந்தமாயிருப்பது ஆறுதல் அளிக்கிறது, இணைக்கிறது, அர்ப்பணிக்கிறது.
சோகத்தில் கூட, ஆவிக்குரிய ஆயத்தம், நாம் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் தனிமையாகவும் உணர்ந்தபோதும், பரலோக பிதா நம் சூழ்நிலைகளை அறிந்திருந்தார் என்பதை நினைவூட்டலாம். உதாரணமாக, அவர்களது குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குடும்பம், பின்னர் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் முன்கூட்டியே கிசுகிசுத்ததை நினைத்து ஆறுதல் அடைந்தனர்.
சில சமயங்களில் பெரிய நித்திய எதார்த்தமாக கர்த்தர் நம்மை உணரச்செய்வது திரைக்கு அப்பால் உள்ள குடும்பத்தை உள்ளடக்கியதாகும் . இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்துக்கு மனமாறியதில் ஒரு சகோதரி மகிழ்ச்சியைக் கண்டார். ஆயினும்கூட, இரண்டு அதிர்ச்சிகள் அவளுடைய வாழ்க்கையை ஆழமாகப் பாதித்தன - ஒரு படகு விபத்தைப் பார்த்தது மற்றும் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தனது தாயை சோகமாக இழந்தது. இரண்டு அதிர்ச்சிகள் அவரது வாழ்க்கையை ஆழமாகப் பாதித்தன—படகு விபத்து மற்றும் தன் சொந்த வாழ்க்கையை முடித்த அவரது தாயை சோகமாக இழந்ததைப் பார்த்தது.
ஆனாலும் இந்தச் சகோதரி மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க போதுமான, தண்ணீரின் மீதுள்ள பயத்தை மேற்கொண்டாள். மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாறிய அந்த நாளில், இறந்து போன தன் தாய்க்கு யாரோ ஒருவர் ஆலயத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட பதிலியாக செயல்படுவதைக் கண்டாள். “ஆலய ஞானஸ்நானம் என் அம்மாவைக் குணப்படுத்தியது, அது என்னை விடுவித்தது” என்று சகோதரி கூறினாள். “என் அம்மா இறந்த பிறகு நான் நிம்மதியாக உணர்ந்தது இதுவே முதல் முறை.”
நமது பரிசுத்த இசையானது, நமது நன்மைக்காக அனைத்தும் ஒன்றாகச் செயல்பட முடியும் என்ற அவருடைய உறுதியை எதிரொலிக்கிறது.
இயேசுவே கிறிஸ்து மற்றும் தேவன் அவருடைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறார் என்பதற்கு மார்மன் புஸ்தகம் சான்றாகும். நம் நாளைப் பார்த்த உணர்த்தப்பட்ட தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட, மார்மன் புஸ்தகம், ஆழமான வேறுபாடுகளைக் கையாளும் ஒரு நாடகத்துடன் தொடங்குகிறது. ஆனாலும், 1 நேபி 1 முதல் மரோனி 10 வரை நாம் படிக்கும்போதும், சிந்திக்கும்போதும், இயேசு கிறிஸ்துவிடம் நாம் ஈர்க்கப்படுகிறோம், அங்கே என்ன நடந்தது என்பது இங்கேயும் இப்போதும் நம்மை ஆசீர்வதிக்க முடியும் என்ற உறுதியான சாட்சியத்துடன் .
கர்த்தர் தம்முடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தருடைய அதிகமான வீடுகளை நம்மில் பலருக்கு அதிக இடங்களில் நெருக்கமாக கொண்டு வருவதால், ஆலய ஆசீர்வாதங்கள் நம் நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுவதைக் காண்கிறோம். ஒரு தனிப்பட்ட வழியில், நாம் உடன்படிக்கை மற்றும் நியமம் மூலம் நம் பிதாவாகிய தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் வந்து உலக வாழ்க்கை பற்றிய நித்திய கண்ணோட்டத்தைப் பெறுகிறோம். சீயோன் மலையில் கர்த்தருடைய இரட்சகர்களின் மாதிரியில் இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கை ஆசீர்வாதங்களை நாம் வழங்கும்போது, ஒன்றன் பின் ஒன்றாக, பெயருக்கு பெயர், பதிலி ஆலய நியமங்கள் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தை ஒன்றிணைக்கிறது.
பல இடங்களில் ஆலயங்கள் நமக்கு நெருக்கமாக வருவதால், அடிக்கடி கர்த்தரின் வீட்டில் பரிசுத்தம் தேடுவதே ஆலய தியாகமாகும். ஆலயத்துக்கு வர பல வருடங்களாக, சேமித்து, திட்டமிட்டு, தியாகம் செய்தோம். இப்போது, சூழ்நிலைகள் அனுமதிக்கிறவாறு, தயவு செய்து அவருடைய பரிசுத்த வீட்டிற்கு கர்த்தரிடம் அடிக்கடி வாருங்கள். வழக்கமான ஆலய வழிபாடும் சேவையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும், பாதுகாக்கட்டும், ஊக்கமளிக்கட்டும்—உங்களுக்கு இருக்கும் குடும்பம் அல்லது உங்களுக்கு இருக்கப்போகும் குடும்பமாக என்றாவது ஒரு நாள் பெறுவீர்கள்.
மேலும், உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் இடத்தில், உங்கள் ஆலய ஆடைகளை சொந்தமாக வைத்திருப்பதன் உங்கள் சொந்த ஆசீர்வாதத்தைப் பற்றி சிந்தியுங்கள். உலகத்தில் அவர் மிகவும் விரும்பியது அவருடைய சொந்த ஆலய ஆடைகள்தான் என, ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி சொன்னார். அவரது பேரன் சொன்னான், “பாட்டி கிசுகிசுத்தார், ‘நான் என் சொந்த ஆலய ஆடைகளில் சேவை செய்வேன், நான் இறந்தவுடன், நான் அவற்றோடு அடக்கம் செய்யப்படுவேன்’”. நேரம் வந்ததும், அவர் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டார்.
தலைவர் ரசல் எம். நெல்சன் போதிக்கிறபடி, “நாம் நம்பும் அனைத்தும், தேவன் தம் உடன்படிக்கை மக்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆலயத்தில் ஒன்றுசேர்ந்து வருகின்றன.”
இக்காலத்திலும் நித்தியத்திலும், சிருஷ்டிப்பின் நோக்கமும் தேவனின் தன்மையும் நம் நன்மைக்காக அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவருவதாகும்.
இதுவே கர்த்தரின் நித்திய நோக்கமாகும். அது அவருடைய நித்தியக் கண்ணோட்டம். இது அவருடைய நித்திய வாக்குறுதி.
வாழ்க்கை குழப்பமாக இருக்கும்போது, நோக்கம் தெளிவாக இல்லாதபோது, நீங்கள் சிறப்பாக வாழ விரும்பும்போது, ஆனால் எப்படி என்று தெரியாதபோது, தயவுசெய்து நம்முடைய பிதாவாகிய தேவனிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் வாருங்கள். அவர்கள் ஜீவிக்கிறார்கள், உங்களை நேசிக்கிறார்கள், உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் விரும்புகிறார்கள் என்று நம்புங்கள். இயேசு கிறிஸ்துவின் புனித மற்றும் பரிசுத்த நாமத்தில் அவர்கள் முடிவில்லாமலும் நித்தியமாகவும் உங்களை நேசிக்கிறார்கள் என்று நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.