கெட்ட குமாரன் மற்றும் வீட்டிற்கு வழிநடத்தும் சாலை
தேர்வுகள் உங்களை இரட்சகரிடமிருந்தும் அவருடைய சபையிலிருந்தும் வெகுதூரம் அழைத்துச் சென்றிருந்தாலும், குணமாக்கும் போதகர் வீட்டிற்குச் செல்லும் சாலையில் நின்று உங்களை வரவேற்கிறார்.
ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்
இதுவரை சொல்லப்படாத மிகச் சிறந்த சிறுகதை என்று சிலரால் அழைக்கப்பட்டது.1 உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளில், உலகில் எங்காவது இக்கதை குறிப்பிடப்படாமல் சூரியன் மறையவில்லை.
“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே” பூமிக்கு வந்த நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவால் இது சொல்லப்பட்டது.2 அவர் இந்த எளிய வார்த்தைகளுடன் தொடங்குகிறார்: “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.”3
இருதயத்தை உடைக்கும் ஒரு மோதலைப் பற்றி உடனடியாக அறிந்து கொள்கிறோம். ஒரு மகன் 4தனது தந்தையிடம் தான் வீட்டில் வாழ்க்கையை முடித்துவிட்டதாக கூறுகிறான். அவன் தனது சுதந்திரத்தை விரும்புகிறான். அவன் தனது பெற்றோரின் கலாச்சாரம் மற்றும் போதனைகளை விட்டுவிட விரும்புகிறான். அவன் தனது பரம்பரைப் பங்கைக் கேட்கிறான்—உடனே.5
இதைக் கேட்ட தகப்பன் என்ன உணர்ந்தார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எல்லாவற்றையும் விட தனது மகன் குடும்பத்தை விட்டு வெளியேறி, ஒருவேளை திரும்பி வரக்கூடாது என விரும்புகிறான் என்பதை அவர் அப்போது உணர்ந்தார்?
மகா சாகசம்
மகன் சாகசத்தையும் உற்சாகத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். இறுதியாக, அவன் தனியாக இருந்தான். அவனது இளமைக் கால கலாச்சாரத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளிலிருந்து விடுபட்ட அவன், தனது பெற்றோரின் செல்வாக்கின்றி இறுதியாக தனது சொந்த விருப்பங்களைச் செய்ய முடியும். இனிமேலும் குற்ற உணர்வு இருக்காது. அவன் ஒத்த எண்ணம் கொண்ட சமூகத்தை ஏற்றுக்கொண்டு தனது சொந்த விதிமுறைகளில் வாழ்க்கையை வாழ முடியும்.
தொலைதூர நாட்டிற்கு வந்த அவன், விரைவில் புதிய நண்பர்களை உருவாக்கி, அவன் எப்போதும் கனவு கண்ட வாழ்க்கையை வாழத் தொடங்கினான். பணத்தை தாராளமாக செலவழித்ததால், பலருக்கும் பிடித்தவனாக இருந்திருக்க வேண்டும். அவனுடைய புதிய நண்பர்கள், அவனுடைய ஊதாரித்தனத்தின் பயனாளிகள், அவனை நியாயந்தீர்க்கவில்லை. அவர்கள் கொண்டாடினார்கள், பாராட்டினார்கள், அவனுடைய தேர்வுகளை பாராட்டினார்கள்.6
அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக அவன் சிரிக்கும் நண்பர்களின் அனிமேஷன் புகைப்படங்களால் பக்கங்களை நிரப்பியிருப்பான்: #என்னுடைய சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறேன்! #இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை! #இதை முன்பே செய்திருக்க வேண்டும்!
பஞ்சம்
ஆனால் விருந்து நீடிக்கவில்லை—அது அரிதாகவே நடக்கும். இரண்டு விஷயங்கள் நடந்தன: முதலில், அவனிடம் பணம் இல்லாமல் போனது, இரண்டாவதாக, ஒரு பஞ்சம் தேசத்தில் பரவியது.7
பிரச்சனைகள் தீவிரமடைந்ததால், அவன் பீதியடைந்தான். ஒரு காலத்தில் நிறுத்த முடியாத, மகிழ்ச்சியுடன் இருந்த இறுமாப்புள்ளவன் இப்போது ஒரு உணவைக் கூட வாங்க முடியவில்லை, தங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லை. அவன் எப்படி உயிர் பிழைப்பான்?
அவன் தனது நண்பர்களிடம் தாராளமாக இருந்தான்—அவர்கள் இப்போது அவனுக்கு உதவுவார்களா? அவன் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் வரை—இப்போதைக்கு—கொஞ்சம் ஆதரவைக் கேட்பதை என்னால் பார்க்க முடிகிறது.
“ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை,” என்று வேதம் நமக்குச் சொல்கிறது.8
உயிருடன் இருக்க ஆசைப்பட்ட அவன், உள்ளூர் விவசாயி ஒருவரைக் கண்டான், அவர் பன்றிக்கு உணவளிக்க அவனை வேலைக்கு அமர்த்தினார்.9
இப்போது மிகவும் பசியுடன், கைவிடப்பட்டு தனிமையில் இருக்கும் அந்த இளைஞன், எப்படி காரியங்கள் இவ்வளவு மோசமாக, பயங்கரமாக தவறாக நடந்திருக்க முடியும் என்று யோசித்திருக்க வேண்டும்.
வெறும் வயிறு மட்டும் அவனை தொந்தரவு செய்யவில்லை. அது அந்த வெற்று ஆத்துமாவும் கூட. தனது உலக ஆசைகளுக்கு அடிபணிவது தன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்பதில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான், அந்த மகிழ்ச்சிக்கு தார்மீக சட்டங்கள் தடையாக இருந்தன. இப்போது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. மேலும், அந்த அறிவுக்கு அவன் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது!10
உடல் மற்றும் ஆவிக்குரிய பசி வளரவே, அவனது எண்ணங்கள் அவனது தகப்பனிடம் திரும்பியது. இவ்வளவு நடந்த பிறகு அவர் அவனுக்கு உதவுவாரா? அவனது தகப்பனின் பணியாட்களில் மிகவும் எளிமையானவர்களும், உண்பதற்கு உணவும் புயலில் இருந்து அடைக்கலமும் பெற்றிருந்தனர்.
ஆனால் தகப்பனிடம் திரும்புவதா?
ஒருபோதும் இல்லை!
அவன் தனது சுதந்தரத்தை வீணடித்துவிட்டான் என்று அவனது கிராமத்தில் அறிக்கை செய்யலாமா?
முடியாது.
அவன் தனது குடும்பத்தை இழிவுபடுத்துகிறான், பெற்றோரின் இருதயங்களை உடைக்கிறான் என்று நிச்சயமாக எச்சரித்த அண்டை வீட்டாரை எதிர்கொள்வானா? தான் எப்படி சுதந்திரம் அடைந்தேன் என்று பெருமையாய் பேசிக்கொண்ட, தனது பழைய நண்பர்களிடம் திரும்புவானா?
தாங்க முடியாதது.
ஆனால் பசி, தனிமை மற்றும் வருத்தம் ஆகியவை வெறுமனே மறைந்துவிடாது, “அவனுக்கு புத்தி தெளிந்தது.”11
அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்தது.
திரும்புதல்
இப்போது நாம் வீட்டின் மனமுடைந்த எஜமானரான தகப்பனிடம் செல்வோம். எத்தனை நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான மணிநேரங்களை அவர் தனது மகனைப் பற்றி கவலைப்பட்டு கழித்திருப்பார்?
தன் மகன் சென்ற பாதையை எத்தனை முறை பார்த்துவிட்டு, தன் மகன் விலகிச் சென்றபோது தான் உணர்ந்த ஊடுருவும் இழப்பை அவர் எத்தனை முறை உணர்ந்திருப்பார்? தனது மகன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், உண்மையைக் கண்டறிய வேண்டும், திரும்பி வர வேண்டும் என்று தேவனிடம் மன்றாடி, இரவின் ஆழத்தில் அவர் எத்தனை ஜெபங்களைச் செய்திருப்பார்?
பின்னர் ஒரு நாள், தகப்பன் அந்தத் தனிமையான சாலையைப் பார்க்கிறார்— வீட்டிற்கு வரும் சாலையில், ஒரு தொலைதூர உருவம் தன்னை நோக்கி நடந்து வருவதைக் காண்கிறார்.
அது சாத்தியமா?
அந்நபர் ஒரு தூரத்திலிருந்தாலும், அது தனது மகன் என்பது தந்தைக்கு நொடியில் தெரியும்.
அவர் அவனிடம் ஓடி, அவனை கைகளால் அணைத்து, அவனை முத்தமிடுகிறார்.12
“அப்பா,” மகன் கூக்குரலிடுகிறான், ஒரு பேச்சை அவன் ஆயிரம் முறை ஒத்திகை பார்த்திருக்க வேண்டும், “பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.” இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, என்று சொல்லி; உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்.”13
ஆனால் தகப்பன் அவன் முடிக்க அனுமதிக்கவில்லை. கண்களில் கண்ணீருடன், அவர் தனது ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறார்: “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் மகன் திரும்பவும் காணப்பட்டான்.”14
கொண்டாட்டம்
என் அலுவலகத்தில் ஜெர்மன் கலைஞரான ரிச்சர்ட் பர்டே வரைந்த ஓவியம் தொங்குகிறது. ஹாரியட்டும் நானும் இந்த ஓவியத்தை விரும்புகிறோம். இது இரட்சகரின் உவமையிலிருந்து ஒரு மென்மையான காட்சியை ஆழமான கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறது.
மகன் திரும்பி வந்ததில் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும், ஒருவன் மகிழ்ச்சியாக இல்லை, அவனது மூத்த சகோதரன்.15
அவன் உணர்ச்சிபூர்வ சில சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறான்.
அவனது சகோதரன் தனது சுதந்தரத்தைக் கேட்டபோது அவன் அங்கு இருந்தான். அவன் தனது தகப்பனின் துக்க பாரத்தை நேரடியாகக் கண்டிருக்கிறான்.
அவனது சகோதரன் போனதில் இருந்து அப்பாவின் பாரத்தை எடுக்க முயன்றிருக்கிறான். ஒவ்வொரு நாளும், அவன் தனது தந்தையின் உடைந்த இருதயத்தை மீட்டெடுக்க உழைத்தான்.
இப்போது பொறுப்பற்ற குழந்தை திரும்பி வந்துள்ளது, மேலும் அவனது கலகக்கார சகோதரர் மீது மக்கள் கவனத்தை செலுத்துவதை நிறுத்த முடியவில்லை.
அவன் தன் தகப்பனிடம் சொல்கிறான், “இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு கொண்டாட்டத்தை கொடுக்கவில்லை.”16
அன்பான தகப்பன் பதிலளிக்கிறார்: “மகனே, எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. இது வெகுமதிகளையோ கொண்டாட்டங்களையோ ஒப்பிடுவது அல்ல. இது குணப்படுத்துவது பற்றியது. இத்தனை வருடங்களாக நாம் எதிர்பார்த்த தருணம் இது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்.”17
இது நமது கால உவமை
என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, அன்பான நண்பர்களே, இரட்சகரின் உவமைகள் அனைத்தையும் போலவே, இது நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்களைப் பற்றியது அல்ல. இன்று உன்னையும் என்னையும் பற்றியது.
நம்மில் யார் தான் பரிசுத்த பாதையில் இருந்து விலகிச் செல்லவில்லை, நம் சுயநலப் பாதையில் அதிக மகிழ்ச்சியைக் காணலாம் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கவில்லையா?
நம்மில் யார்தான் மனத்தாழ்மை, மனம் உடைந்து, மன்னிப்புக்கும் இரக்கத்துக்கும் ஆசைப்படாமல் இருக்கிறோம்?
ஒருவேளை நாம் ஆச்சரியப்பட்டிருக்கலாம், “திரும்பிச் செல்வது கூட சாத்தியமா?” எனது முன்னாள் நண்பர்களால் நான் என்றென்றும் முத்திரை குத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, தவிர்க்கப்படுவேனா? தொலைந்து போவது நல்லதா? நான் திரும்பி வர முயற்சித்தால் தேவன் எப்படி நடந்துகொள்வார்?”
இந்த உவமை நமக்கு விடை தருகிறது.
அவருடைய இருதயம் அன்பினாலும் இரக்கத்தினாலும் நிரம்பி வழிந்து, நம்முடைய பரலோக பிதா நம்மிடம் ஓடி வருவார். அவர் நம்மைத் தழுவுவார்; நமது தோள்களில் ஒரு அங்கி, நமது விரலில் ஒரு மோதிரம், நமது காலில் செருப்புகளை மாட்டுவார்; மற்றும் அறிவிப்பார், “இன்று நாங்கள் கொண்டாடுகிறோம்! ஒரு காலத்தில் இறந்து போன என் குழந்தை மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது!’’
நாம் திரும்பி வரும்போது பரலோகம் மகிழ்ச்சியடையும்.
சொல்ல முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தது
நான் இப்போது சிறிது நேரம் ஒதுக்கி உங்களுடன் தனித்தனியாக பேசலாமா?
உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனது அன்பு நண்பரும் சக அப்போஸ்தலருமான ஜெப்ரி ஆர். ஹாலண்டின் வார்த்தைகளை நான் எதிரொலித்து அறிவிக்கிறேன்: “கிறிஸ்துவின் [பாவநிவாரண பலியின்] எல்லையற்ற ஒளியை விட நீங்கள் கீழே மூழ்குவது சாத்தியமில்லை.”18
தேர்வுகள் உங்களை இரட்சகரிடமிருந்தும் அவருடைய சபையிலிருந்தும் வெகுதூரம் அழைத்துச் சென்றிருந்தாலும், குணமாக்கும் போதகர் வீட்டிற்குச் செல்லும் சாலையில் நின்று உங்களை வரவேற்கிறார். இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினர்களாகிய நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவும், உங்களை எங்கள் சகோதர சகோதரிகளாகவும், எங்கள் நண்பர்களாகவும் அரவணைக்க விரும்புகிறோம். நாங்கள் உங்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
உங்கள் வருகையால் மற்றவர்களின் ஆசீர்வாதங்கள் குறையாது. ஏனெனில் பிதாவின் அருட்கொடை எல்லையற்றது, ஒருவருக்குக் கொடுக்கப்படுவது மற்றவர்களின் பிறப்புரிமையை சிறிதும் குறைக்காது.19
திரும்பி வருவது எளிதான காரியம் என்று நான் பாசாங்கு செய்யவில்லை. அதற்கு என்னால் சாட்சியமளிக்க முடியும். உண்மையில், இது நீங்கள் செய்யும் கடினமான தேர்வாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் திரும்பி வந்து நமது இரட்சகரும் மீட்பருமானவரின் வழியில் நடக்க முடிவு செய்யும் தருணத்தில், அவருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் நுழையும், அதை மாற்றும் என்று நான் சாட்சி கூறுகிறேன்.20
பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் குடும்பத்தாராகிய நாங்களும் அவ்வாறே செய்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கெட்ட குமாரனாக இருப்பது எப்படி என்று நமக்குத் தெரியும். நாம் அனைவரும் கிறிஸ்துவின் அதே பாவநிவர்த்தியின் வல்லமையை தினமும் சார்ந்திருக்கிறோம். இந்த பாதை எங்களுக்குத் தெரியும், நாங்கள் உங்களுடன் நடப்போம்.
இல்லை, நமது பாதையில் துக்கம், துயரம் அல்லது சோகம் ஆகியவை இல்லாமலில்லை. ஆனால் “நாம் கிறிஸ்துவின் வார்த்தையினால் அவர்மீது அசைக்க முடியாத விசுவாசத்துடன், இரட்சிக்க வல்லவருடைய தகுதிகளை முழுவதுமாக நம்பி” இவ்வளவு தூரம் வந்தோம். மேலும் ஒன்றாக நாம் “கிறிஸ்துவில் உறுதியுடன் முன்னேறுவோம், நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்தையும், தேவன் மீதும் [மக்கள்] அனைவரின் மீதும் அன்பு கொண்டு.”21 நாம் ஒன்றாகச் சேர்ந்து “சொல்ல முடியாத மகிமையினால் நிறைந்த மகிழ்ச்சியுடன்” மகிழ்வோம்.22 ஏனெனில் இயேசு கிறிஸ்து நமது பலம்!23
இந்த ஆழ்ந்த கருத்துள்ள உவமையில், வீட்டிற்குச் செல்லும் பாதையில் நுழையுமாறு தகப்பனின் குரலை நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்—மனந்திரும்பவும், மன்னிப்பைப் பெறவும், நமது மனதுருக்கமுள்ள மற்றும் இரக்கமுள்ள தேவனிடம் திரும்பிச் செல்லும் பாதையைப் பின்பற்றவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஜெபம். இதற்கு நான் சாட்சியமளித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் ஆசீர்வாதத்தை விட்டுச் செல்கிறேன், ஆமென்.