நித்திய சத்தியம்
சத்தியத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நமது தேவை ஒருபோதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை!
சகோதர சகோதரிகளே, பிதாவாகிய தேவன் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் நீங்கள் கொண்ட பக்திக்கு நன்றி, மேலும் ஒருவருக்கொருவர் மீதான உங்கள் அன்புக்கும் சேவைக்கும் நன்றி. நீங்கள் உண்மையிலேயே விசேஷித்தவர்!
முன்னுரை
நானும் என் மனைவி ஆனும், முழுநேர ஊழியம் செய்வதற்கான அழைப்பைப் பெற்ற பிறகு, எங்கள் குடும்பம் களத்துக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஊழியக்காரரின் பெயரையும் அறிந்துகொள்ள தீர்மானித்தோம். நாங்கள் புகைப்படங்களைப் பெற்று, ஃபிளாஷ் கார்டுகளை உருவாக்கி, முகங்களைப் படிக்கவும், பெயர்களை மனப்பாடம் செய்யவும் தொடங்கினோம்.
நாங்கள் வந்தவுடன், ஊழியக்காரர்களுடன் அறிமுக மாநாடுகளை நடத்தினோம். நாங்கள் கலந்துகொண்டபோது, எங்கள் ஒன்பது வயது மகன் சொல்வதை நான் கேட்டேன்:
“உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, சாம்!”
“ரேச்சல், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
“ஆஹா, டேவிட், நீங்கள் உயரமாக இருக்கிறீர்கள்!”
பதற்றத்துடன், நான் எங்கள் மகனிடம் சென்று, “ஏய், ஊழியக்காரர்களை மூப்பர் அல்லது சகோதரி என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்” என்று கிசுகிசுத்தேன்.
அவன் என்னை ஒரு புதிராகப் பார்த்து, “அப்பா, அவர்களின் பெயர்களை நாம் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்றான். எங்கள் மகன் தனது புரிதலின் அடிப்படையில் தான் நினைத்ததைச் செய்தான்.
எனவே, இன்றைய உலகில் உண்மையைப் பற்றிய நமது புரிதல் என்ன? வலுவான கருத்துக்கள், ஒருசார்பான அறிக்கை மற்றும் முழுமையற்ற தரவு ஆகியவற்றால் நாம் தொடர்ந்து அலைக்களிக்கப்படுகிறோம். அதே நேரத்தில், தகவல்களின் ஆதாரங்கள் மற்றும் அளவு வேகமாக வளர்ந்து வருகிறது. சத்தியத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நமது தேவை இப்போதைவிட முக்கியமானதாக இருந்ததில்லை!
தேவனுடன் ஒரு உறவை ஏற்படுத்தவும் பலப்படுத்தவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறியவும், நமது தெய்வீக ஆற்றலை அடையவும் சத்தியம் முக்கியமானது. இன்று, பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்வோமாக:
-
சத்தியம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
-
அதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்?
-
நாம் சத்தியத்தைக் கண்டறிந்தால், அதை எப்படிப் பகிரலாம்?
சத்தியமே நித்தியம்
வேதத்தில் கர்த்தர் நமக்கு போதித்ததாவது, “அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியே சத்தியம் காரியங்களைப்பற்றிய ஞானமாகும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24). இது “சிருஷ்டிக்கப்படவோ, உண்டாக்கப்படவோயில்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:29) மற்றும் “முடிவு இல்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:66),1 சத்தியம் முழுமையானது, நிலையானது மற்றும் மாறாதது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சத்தியமே நித்தியம்.2
சத்தியம், ஏமாற்றத்தைத் தவிர்க்கவும்,3 தீமையிலிருந்து நன்மையை அறியவும், 4 பாதுகாப்பைப் பெறவும்,5 மற்றும் ஆறுதலையும் குணப்படுத்துதலையும் பெறவும் உதவுகிறது.6 சத்தியம் நம் செயல்களையும் வழிநடத்தும்,7 நம்மை விடுதலையாக்கும்,8 பரிசுத்தப்படுத்தும்,9 நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.10
தேவன் நித்திய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர், தீர்க்கதரிசிகள் மற்றும் நம்மை உள்ளடக்கிய வெளிப்படுத்தும் உறவுகளின் வலைப்பின்னல் மூலம் நித்திய சத்தியத்தை நமக்கு தேவன், வெளிப்படுத்துகிறார். இந்த செயல்பாட்டில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் வகிக்கும் தனித்துவமான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாத்திரங்களைப் பற்றி நான் கலந்துரையாடுகிறேன்.
முதலாவதாக, தேவன் எல்லா நித்திய சத்தியத்துக்கும் ஆதாரமாக இருக்கிறார்.11 அவரும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் 12, சத்தியத்தை பூரணமாக புரிந்துகொண்டு எப்போதும் உண்மையான கொள்கைகள் மற்றும் நியாயப்பிரமாணங்களுக்கு இசைவாக செயல்படுகிறார்கள்.13 இந்த வல்லமை அவர்களை உலகங்களை உருவாக்கவும் ஆளவும் 14 அத்துடன் நம் ஒவ்வொருவரையும் முழுமையாக நேசிக்கவும், வழிநடத்தவும், வளர்க்கவும் அனுமதிக்கிறது.15 அவர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை நாம் அனுபவித்து மகிழ நாம் சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.16 அவர்கள் நேரில் அல்லது பரிசுத்த ஆவியானவர், தேவதூதர்கள் அல்லது ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் போன்ற தூதுவர்கள் மூலமாக சத்தியத்தை வழங்கலாம்.
இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்தியத்தைக் குறித்தும் சாட்சியமளிக்கிறார்.17 அவர் நமக்கு நேரடியாக சத்தியங்களை வெளிப்படுத்துகிறார், மற்றவர்கள் கற்பிக்கும் சத்தியத்தின் சாட்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆவியிடமிருந்து எண்ணங்கள் குறிப்பாக நம் மனதிற்கு சிந்தனைகளாகவும், நம் இருதயங்களுக்கு உணர்வுகளாகவும் வருகின்றன.18
மூன்றாவதாக, தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து சத்தியத்தைப் பெற்று, அந்த சத்தியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.19 வேதங்களில் உள்ள கடந்தகால தீர்க்கதரிசிகளிடமிருந்தும்,20 பொது மாநாட்டில் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்தும் மற்ற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு முறைகள் மூலமும் நாம் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறோம்.
இறுதியாக, இந்த செயல்பாட்டில் நீங்களும் நானும் முக்கிய பங்கு வகிக்கிறோம். நாம் சத்தியத்தைத் தேடவும், அங்கீகரிக்கவும், செயல்படவும் தேவன் எதிர்பார்க்கிறார். முடிவில், சத்தியத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் நம்முடைய திறன், பிதா மற்றும் குமாரனுடனான நமது உறவின் வலிமை, பரிசுத்த ஆவியின் செல்வாக்கிற்கு நாம் பதிலளிக்கும் தன்மை மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளுடன் நாம் இணைதல் ஆகியவற்றைப் பொறுத்தது.
சத்தியத்திலிருந்து நம்மைத் தடுக்க சாத்தான் செயல்படுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சத்தியம் இல்லாமல் நாம் நித்திய ஜீவனைப் பெற முடியாது என்பதை அவன் அறிவான். தேவனால் சொல்லப்பட்டவற்றிலிருந்து நம்மைக் குழப்புவதற்கும் திசைதிருப்புவதற்கும் அவன் உலக தத்துவங்களுடன் சத்தியத்தின் இழைகளை நெசவு செய்கிறான்.21
நித்திய சத்தியத்தைத் தேடுதல், அங்கீகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்
நாம் நித்திய சத்தியத்தைத் தேடும்போது,22 பின்வரும் இரண்டு கேள்விகள், ஒரு கருத்து தேவனிடமிருந்து வந்ததா அல்லது வேறு ஆதாரத்திலிருந்து வந்ததா என்பதை அறிய உதவும்:
-
இந்த கருத்து வேதங்களில் அல்லது ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறதா?
-
பரிசுத்த ஆவியின் சாட்சியால் கருத்து உறுதிப்படுத்தப்பட்டதா?
தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் நித்திய சத்தியங்களை வெளிப்படுத்துகிறார், பரிசுத்த ஆவியானவர் அந்த சத்தியங்களை தனிப்பட்ட முறையில் நமக்கு உறுதிப்படுத்துகிறார் மற்றும் அதை உபயோகப்படுத்த உதவி செய்கிறார்23 இந்த ஆவிக்குரிய பதிவுகள் வரும்போது அவற்றைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும்.24 நாம் தாழ்மையுடன்,25 உண்மையாக ஜெபித்து, தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது,26 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ஆவியின் சாட்சியை நாம் அதிகமாக ஏற்றுக்கொள்கிறோம்.27
பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒரு குறிப்பிட்ட சத்தியத்தை உறுதிப்படுத்தியவுடன், அந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நமது புரிதல் ஆழமாகிறது. அந்தக் கொள்கையை நாம் தொடர்ந்து கடைபிடிக்கும்போது, அந்த சத்தியத்தைப் பற்றிய உறுதியான அறிவை காலப்போக்கில் பெறுகிறோம்.28
உதாரணமாக, நான் தவறுகளைச் செய்திருக்கிறேன் மற்றும் மோசமான தேர்வுகளுக்காக வருத்தப்பட்டேன். ஆனால் ஜெபம், படிப்பு மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஆகியவற்றின் மூலம், மனந்திரும்புதல் கொள்கையின் சாட்சியைப் பெற்றேன்.29 நான் தொடர்ந்து மனந்திரும்பும்போது, மனந்திரும்புதல் பற்றிய எனது புரிதல் வலுவடைந்தது. நான் தேவனுடனும் அவருடைய குமாரனுடனும் நெருக்கமாக உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்களை நான் அனுபவிப்பதால், இயேசு கிறிஸ்துவின் மூலம் பாவம் மன்னிக்கப்படும் என்பதை நான் இப்போது அறிகிறேன்.30
சத்தியம் இன்னும் வெளிவராத போது தேவனை நம்புதல்
அப்படியானால், இதுவரை வெளிவராத சத்தியத்தை உண்மையாகத் தேடும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வராத பதில்களுக்காக ஏங்கும் நம்மிடையேயுள்ளோர் மீது எனக்கு மிகுந்த மனதுருக்கம் உண்டு.
ஜோசப் ஸ்மித்துக்கு, கர்த்தர் ஆலோசனை கூறினார், இந்தக் காரியத்தைக் குறித்து சகல விஷயங்களையும் உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு ஏற்றதென்று நான் காண்கிறவரை நீ பேசாதிருப்பாயாக. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:37).
மேலும் எம்மா ஸ்மித்திடம், “நீ பார்க்காத காரியங்கள் குறித்து முறுமுறுக்காதே, ஏனெனில் அவைகள் உன்னிடமிருந்தும் உலகத்திலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, இது வரப்போகிற ஒரு நேரம் வரை எனது ஞானமாய் இருக்கிறது.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:4)
நானும் இதயப்பூர்வமான கேள்விகளுக்கு விடை தேடினேன். பல பதில்கள் வந்துள்ளன, சில வரவில்லை.31 தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் நம்பி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, நமக்குத் தெரிந்தவற்றைச் சார்ந்து நாம் காத்துக்கொண்டிருக்கும்போது, நாம் அறிந்தவற்றை சார்ந்திருந்து, அவர் எல்லாவற்றின் சத்தியத்தையும் வெளிப்படுத்தும் வரை அவர் நமக்கு சமாதானம் காண உதவுகிறார்.32
கோட்பாடு மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வது
சத்தியத்தைத் தேடும்போது, கோட்பாட்டுக்கும் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கோட்பாடு என்பது தேவனின் தன்மை, இரட்சிப்பின் திட்டம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி போன்ற நித்திய சத்தியங்களைக் குறிக்கிறது. கொள்கை என்பது தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் கோட்பாட்டின் தீர்க்கதரிசன பயன்பாடு ஆகும். கொள்கைகள் தலைவர்கள் சபையை ஒழுங்கான முறையில் நிர்வகிக்க உதவுகின்றன.
கோட்பாடு ஒருபோதும் மாறாது என்றாலும், கொள்கைகள் அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன. கர்த்தர் தம்முடைய கோட்பாட்டை நிலைநிறுத்தவும் மற்றும், அவருடைய பிள்ளைகளின் தேவைக்கேற்ப சபைக் கொள்கைகளை சீறாக்கவும் அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் செயல்படுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, சில சமயங்களில் கொள்கையை கோட்பாட்டுடன் இணைக்கிறோம். வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், கொள்கைகள் மாறும்போது நாம் ஏமாற்றமடைந்து, தேவனின் ஞானத்தை அல்லது தீர்க்கதரிசிகளின் வெளிப்படுத்தும் பாத்திரத்தை சிலர் கேள்விக்குட்படுத்தும் அபாயம் உள்ளது.33
நித்திய சத்தியத்தைக் கற்பித்தல்
நாம் தேவனிடமிருந்து சத்தியத்தைப் பெறும்போது, அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் நம்மை ஊக்குவிக்கிறார்.34 நாம் ஒரு வகுப்பில் கற்பிக்கும்போது, ஒரு குழந்தைக்கு வழிகாட்டும்போது அல்லது ஒரு நண்பருடன் சுவிசேஷ சத்தியங்களைப் பற்றி விவாதிக்கும்போது இதைச் செய்கிறோம்.
பரிசுத்த ஆவியின் மனமாற்றும் வல்லமையை அழைக்கும் விதத்தில் சத்தியத்தைப் போதிப்பதே நமது நோக்கம்.35 கர்த்தரிடமிருந்தும் அவருடைய தீர்க்கதரிசிகளிடமிருந்தும் உதவும் எளிய, சுருக்கமான அழைப்புகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.36
-
பரலோக பிதா, இயேசு கிறிஸ்து மற்றும் அவர்களின் அடிப்படைக் கோட்பாடு ஆகியவற்றை மையப்படுத்துங்கள்.37
-
வேதங்களிலும் பிற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளிலும் நிலைத்திருங்கள்.38
-
பல அதிகாரபூர்வமான சாட்சிகள் மூலம் நிறுவப்பட்ட கோட்பாட்டை சார்ந்திருங்கள்.39
-
ஊகங்கள், தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது உலகப்பிரகார யோசனைகளைத் தவிருங்கள்.40
-
சமநிலையான புரிதலை வளர்ப்பதற்கு தொடர்புடைய சுவிசேஷ சத்தியங்களின் சூழலில் ஒரு கோட்பாட்டைக் கற்பிக்கவும்.41
-
ஆவியின் செல்வாக்கை அழைக்கும் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தவும்.42
-
தவறான புரிதலைத் தவிர்க்க தெளிவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.43
அன்போடு சத்தியத்தைப் பேசுதல்
சத்தியத்தை எப்படிக் கற்பிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. “அன்புடன் சத்தியத்தைப் பேச” பவுல் நம்மை ஊக்குவித்தான் (எபேசியர் 4:14–15 பார்க்கவும்). கிறிஸ்துவைப் போன்ற அன்புடன் தெரிவிக்கப்படும் போது சத்தியம் மற்றொருவரை ஆசீர்வதிக்க சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதே இதன் பொருள்.44
அன்பு இல்லாமல் கற்பிக்கப்படும் சத்தியம், தீர்ப்பு, அதைரியப்படுத்தல் மற்றும் தனிமை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இது அடிக்கடி மனக்கசப்பு மற்றும் பிளவு, பிணக்குக்கும் கூட வழிவகுக்கிறது. மாறாக, உண்மை இல்லாத அன்பு வெறுமையானது மற்றும் வளர்ச்சியின் வாக்குத்தத்தம் இல்லாதது.
நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு சத்தியம் மற்றும் அன்பு இரண்டும் அவசியம்.45 நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தேவையான கோட்பாடு, கொள்கைகள் மற்றும் நியாயப்பிரமாணங்களை சத்தியம் வழங்குகிறது, அன்பில் உண்மையைப் பேசுவது, சத்தியத்தைத் தழுவி செயல்படுவதற்குத் தேவையான உந்துதலை உருவாக்குகிறது.
நித்திய சத்தியத்தை அன்புடன் பொறுமையாக எனக்குக் கற்பித்த மற்றவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
முடிவுரை
முடிவில், என் ஆத்துமாவுக்கு நங்கூரமாக மாறிய நித்திய சத்தியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இன்று கலந்துரையாடப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த சத்தியங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளேன்.
தேவன் நம்முடைய அன்பான பரலோக பிதா என்பதை நான் அறிவேன்.46 அவர் அனைத்தையும் அறிந்தவர்,47 அனைத்து வல்லமை வாய்ந்தவர்,48 மற்றும் பரிபூரண அன்பானவர்.49 நித்திய ஜீவனைப் பெறவும் அவரைப் போல ஆகவும் உதவும் திட்டத்தை அவர் உருவாக்கினார்.50
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் நமக்கு உதவுவதற்காக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.51 பிதாவின் சித்தத்தின்படி செய்ய52 ஒருவரையொருவர் நேசிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார்.53 அவர் நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்து,54 சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.55 அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து எழுந்தார்56 கிறிஸ்து மற்றும் அவருடைய கிருபையின் மூலம், நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம்,57 நாம் மன்னிக்கப்படலாம்,58 மற்றும் நாம் துன்பத்தில் வலிமை காணலாம்.59
அவருடைய பூலோக ஊழியத்தின் போது, இயேசு தம்முடைய சபையை நிறுவினார்.60 காலப்போக்கில், அந்த சபை மாற்றப்பட்டது, சத்தியங்கள் இழக்கப்பட்டன.61 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்து தனது சபையையும், சுவிசேஷத்தின் எளிய மற்றும் விலையேறப்பெற்ற சத்தியங்களையும் மறுஸ்தாபிதம் செய்தார்.62 இன்றும், கிறிஸ்து ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் மூலம் தனது சபையை தொடர்ந்து வழிநடத்துகிறார்.63
நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, நாம் இறுதியில் “அவரில் பூரணப்படலாம்” (மரோனி 10:32), “மகிழ்ச்சியின் ஒரு முழுமையை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:33) பெறலாம், மேலும் “பிதாவுக்குள்ள சகலமும் பெறலாம்” என்பதை நான் அறிவேன்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:38). இந்த நித்திய சத்தியங்கள் குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் சாட்சி கொடுக்கிறேன், ஆமென்.