வேதங்கள்
மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான விளக்கம்


மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான விளக்கம்

மார்மன் புஸ்தகம் பழங்கால அமெரிக்காவில் இருந்த ஜனங்களின் பரிசுத்த பதிவேடு ஆகும். அது உலோகத் தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தது. பின்வருவனவற்றையும் சேர்த்து எதிலிருந்து இந்தப் பதிவுகள் தொகுக்கப்பட்டதோ அந்த ஆதாரங்கள் பின்வருபவை.

  1. நேபியின் தகடுகள், அவை இரண்டு வகைப்படும். சிறிய தகடுகள் மற்றும் பெரிய தகடுகள். முந்தினவை மிகக் குறிப்பாக ஆவிக்குரிய காரியங்களுக்கும், தீர்க்கதரிசிகளின் ஊழியம் மற்றும் போதனைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாயும், பிந்தினவை குறிப்பிட்ட ஜனங்களின் லௌகீக வரலாற்றை அதிகமாய்க் கொண்டதாயுமிருக்கிறது (1 நேபி 9:2–4). ஆயினும் மோசியாவின் காலத்திலிருந்து பெரிய தகடுகளும் மிக முக்கியம் வாய்ந்த பெரிதான ஆவிக்குரிய குறிப்புகளைக் கொண்டிருந்தது.

  2. மார்மன் தகடுகள், அநேக வியாக்கியானங்களுடன் நேபியின் பெரிய தகடுகளிலிருந்து மார்மனால் செய்யப்பட்ட சுருக்கத்தைக் கொண்டதாகும். இந்தத் தகடுகள் மார்மனால் கொடுக்கப்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியையும் அவனது குமாரனாகிய மரோனியால் சேர்க்கப்பட்டவைகளையும் கொண்டதாயிருக்கிறது.

  3. ஏத்தேரின் தகடுகள், இவை யாரேதியர்களின் வரலாற்றை வழங்குகிறது. இந்த வரலாறு மரோனியால் சுருக்கப்பட்டு அவன் தன் சொந்த விமர்சனங்களையும் இடையில் சேர்த்து “ஏத்தேரின் புஸ்தகம்” என்ற தலைப்பின் கீழ் பொது வரலாற்றுடன் இந்தப் பதிவேடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

  4. பித்தளைத் தகடுகள் லேகி ஜனங்களால் எருசலேமிலிருந்து கி.மு 600ல் கொண்டு வரப்பட்டவை. இவை “மோசேயின் ஐந்து புஸ்தகங்களையும், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆளுகையின் தொடக்கம் வரைக்குமான யூதர்களின் பதிவேட்டை ஆதியிலிருந்தும் மற்றும் பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களையும் கொண்டுள்ளது” (1 நேபி 5:11–13) ஏசாயா மற்றும் மற்ற வேதாகம மற்றும் வேதாகமத்திலில்லாத தீர்க்கதரிசிகளை உதாரணம் காட்டி, இந்தத் தகடுகளிலிருந்து அநேக மேற்கோள்கள் மார்மன் புஸ்தகத்திலே தோன்றுகின்றன.

மார்மன் புஸ்தகம், பதினைந்து பிரதான பகுதிகள் அல்லது பிரிவுகளை ஒரு விதிவிலக்கைத் தவிர, புஸ்தகங்கள் என்று அறியப்பட்டு, வழக்கமாக அவைகளின் பிரதான எழுத்தாளரின் பெயரைக் கொண்டதாயிருக்கிறது. முதல் பகுதி ஓம்னியில் முடியும் வரை ஆறு புஸ்தகங்கள் நேபியின் சிறிய தகடுகளிலிருந்தவைகளின் மொழிபெயர்ப்பு ஆகும். ஓம்னி மற்றும் மோசியாவின் புஸ்தகங்களுக்கு இடையில் மார்மன் வார்த்தைகள் என்று அழைக்கப்படுகிற இடைச் சேர்க்கை உள்ளது. இந்த இடைச் சேர்க்கை சிறிய தகடுகளின் மீது பதிக்கப்பட்டிருந்த பதிவேட்டை மார்மனின் பெரிய தகடுகளின் சுருக்கத்தோடு இணைக்கிறது.

மிக நீளமான பகுதியான, மோசியா முதல் மார்மன் 7 ம் அதிகாரம் வரை நேபியின் பெரிய தகடுகளை மார்மன் சுருக்கியதின் மொழிபெயர்ப்பாயிருக்கிறது. மார்மன் 8ம் அதிகாரம் தொடங்கி, புஸ்தகத்தின் முடிவுவரை உள்ள இறுதிப் பகுதி மார்மனின் குமாரனாகிய மரோனியால் பொறிக்கப்பட்டவையாயிருக்கின்றன. அவன் தன் தகப்பனின் வாழ்க்கைக் குறிப்பை முடித்த பின்னர் யாரேதியரின் பதிவேடுகளின் சுருக்கத்தை (ஏத்தேரின் புஸ்தகம் என) செய்தான். மரோனியின் புஸ்தகம் எனப்படும் பாகங்களை அவன் பின்னர் சேர்த்துக்கொண்டான்.

ஏறக்குறைய கி.பி. 421ம் வருஷத்தில் அல்லது அந்த வருஷத்தில் நேபியர்களின் கடைசி தீர்க்கதரிசி மற்றும் வரலாற்றாசிரியரான மரோனி பரிசுத்த பதிவேடுகளை முத்திரையிட்டு, தேவனின் சத்தம் அவருடைய பூர்வகால தீர்க்கதரிசிகளின் மூலம் முன்னுரைத்ததுபோல், பிற்காலங்களில் வரும்படியாய் அதை கர்த்தருக்குள்ளாக மறைத்து வைத்தான். அதே மரோனி பின்பு உயிர்த்தெழுந்தவனாக கி.பி. 1823ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தான். பிற்பாடு பொறிக்கப்பட்டிருந்த தகடுகளை அவரிடம் ஒப்படைத்தான்.

இந்த பதிப்பைப்பற்றி: பொருளடக்க பக்கத்தைத் தொடர்ந்துவரும் முதல் தலைப்புப் பக்கம், தகடுகளிலிருந்து எடுக்கப்பட்டதாயும் பரிசுத்த உரையின் பகுதியுமாயிருக்கிறது. 1 நேபி மற்றும் மோசியா அதிகாரம் 9க்கு முன்வரும் சாய்வெழுத்தில்லாத முன்னுரைகளும்கூட பரிசுத்த உரையின் பகுதியாயிருக்கிறது. அதிகாரத்தின் தலைப்புகளைப் போன்ற சாய்வெழுத்திலுள்ள முன்னுரை உரையுடன் முதலிலேயே இருந்தவையல்ல, ஆனால் வாசிக்கும் வசதிக்காக சேர்க்கப்பட்ட படிப்பு உதவிகள்.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள மார்மன் புஸ்தகத்தின் பழைய வெளியீடுகளின் விளக்க உரையில் சில சிறிய தவறுகள் விட்டுவைக்கப்பட்டிருந்தன. வெளியிடப்படுவதற்கு முந்திய கையெழுத்துப் பிரதிகளும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட உரையைக் கொண்டுவர பொருத்தமாகத் தோன்றுகிற திருத்தங்களும் இந்த பதிப்பில் அடங்கியிருக்கிறது.

அச்சிடவும்