2010–2019
இரட்சிக்கும் நியமங்கள் நமக்கு அற்புதமான ஒளியைக் கொண்டுவரும்
ஏப்ரல் 2018


இரட்சிக்கும் நியமங்கள் நமக்கு அற்புதமான ஒளியைக் கொண்டுவரும்

நியமங்களில் பங்கேற்பதும் தொடர்புடைய உடன்படிக்கைகளை கனம் பண்ணுவதும் உங்களுக்கு அற்புதமான ஒளியையும், இருண்டு கொண்டிருக்கும் உலகில் பாதுகாப்பையும் கொடுக்கும் என நான் வாக்களிக்கிறேன்.

சகோதர சகோதரிகளே, நான் சுவிசேஷத்தில் அல்லது கிறிஸ்துவின் கோட்பாட்டில் களிகூர்கிறேன்.

ஒரு முறை ஒரு நண்பர், அப்போதைய எழுபதின்மரின், மூப்பர் நீல் எல். ஆண்டர்சனிடம் மாநாட்டு மையத்தில் 21,000 பேருக்கு முன்பு பேசுவது எப்படி இருக்கும் என கேட்டார். மூப்பர் ஆண்டர்சன் பதிலளித்தார், “உங்களைப் பயமுறுத்துவது 21,000 ஜனங்களல்ல. உங்களுக்குப் பின்னாலிருக்கும் 15 சகோதரர்கள்.” அப்போது நான் கேலி செய்தேன், ஆனால் இப்போது அதை உணர்கிறேன். இந்த 15 மனுஷர்களையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நான் மிகவும் நேசிக்கிறேன்.

அவனது சந்ததி மற்றும் ஆசாரியத்துவம் மூலமாக பூமியின் சகல குடும்பங்களும் “சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களாலும் ... நித்திய ஜீவியத்திலும்” ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்னார் (ஆபிரகாம் 2:11; மற்றும் வசனங்கள் 2–10 பார்க்கவும்).

இந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களும் ஆசாரியத்துவமும் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டன, பின்னர் 1842ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த தரிப்பித்தலை வழங்கினார். மெர்சி பீல்டிங் தாம்சன் அவர்களில் ஒருவர். தீர்க்கதரிசி அவரிடம் சொன்னார், “இந்த [தரிப்பித்தல்] உங்களை இருளிலிருந்து அற்புதமான வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.” 1

இன்று நான் உங்களுக்கும் எனக்கும் அற்புதமான ஒளியைக் கொண்டு வரக்கூடிய இரட்சிப்பின் நியமங்களைப்பற்றி பார்க்க விரும்புகிறேன்.

நியமங்களும் உடன்படிக்கைகளும்

விசுவாசத்துக்கு உண்மையாக-ல் நாம் வாசிக்கிறோம்: “ஒரு நியமம் ஆசாரியத்துவ அதிகாரத்தால் நிறைவேற்றப்படுகிற பரிசுத்தமான முறையான செயலாகும். இந்நியமங்கள் நமது மேன்மைப்படுதலுக்கு தேவையானவை... இரட்சிக்கும் நியமங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஞானஸ்நானம், திடப்படுத்தல், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்துக்கு நியமனம் (ஆண்களுக்கு) ஆலய தரிப்பித்தல் மற்றும் திருமண முத்திரித்தல் ஆகியன அடங்கியுள்ளன.” 2

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார், “கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் நியமங்கள் ... அங்கீகரிக்கப்பட்ட வழிகளை அடக்கியுள்ளன, அவற்றின் மூலம் ஆசீர்வாதங்களும் பரலோக வல்லமைகளும் நமது தனிப்பட்ட வாழக்கையில் வர முடியும்.” 3

இரண்டு பக்கங்கள் உள்ள ஒரு நாணயம் போல, எல்லா இரட்சிக்கும் நியமங்களும் தேவனோடு செய்த உடன்படிக்கையோடு இணைந்து வருகிறது. நாம் அந்த உடன்படிக்கைகளை விசுவாசத்தோடு கனம்பண்ணினால், தேவன் நமக்கு ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தம் செய்தார்.

தீர்க்கதரிசி அமுலேக் அறிவித்தான், “தேவனை சந்திக்க ஆயத்தப்படும் ... நேரம் ... இதுவே.” (ஆல்மா 34:32). நாம் எப்படி ஆயத்தப்படுகிறோம்? தகுதியோடு நியமங்களைப் பெறுவதால். தலைவர் ரசல் எம். நெல்சனின் வார்த்தைகளில் உள்ளது போல நாமும் “உடன்படிக்கையின் பாதையைக் காத்துக் கொள்ள வேண்டும்.” தலைவர் நெல்சன் தொடர்ந்தார், “அவரோடு உடன்படிக்கைகள் செய்து, பின்னர் அந்த உடன்படிக்கைகளை காத்துக்கொண்டு, இரட்சகரைப் பின்பற்றும் உங்கள் ஒப்புக்கொடுத்தல், ஆண்களுக்கும், பெண்களுக்கும், எங்கெங்கிலுமுள்ள பிள்ளைகளுக்கும் கிடைக்கிற ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்கும் சிலாக்கியத்துக்கும் கதவைத் திறக்கிறது.” 4

ஜானும் போனி நியூமனும் உங்களில் அநேகர்போல, தலைவர் நெல்சன் வாக்களித்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் மூன்று இளம் பிள்ளைகளுடன் சபைக்குச் சென்றபிறகு, போனி, சபை அங்கத்தினரல்லாத ஜானிடம் சொன்னாள், “இதை நானாகச் செய்ய முடியாது. எங்களோடு நீங்கள் வருகிறீர்களா அல்லது நாம் ஒன்றாகச் செல்லக்கூடிய சபையைத் தேர்ந்தெடுப்பீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். ஆனால் பிள்ளைகள் அவர்களது தகப்பனும் தேவனை நேசிக்கிறார் என அறிய வேண்டும்.” தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஜான் வந்தது மட்டுமல்ல, அநேக தொகுதிகளுக்கும், கிளைகளுக்கும், ஆரம்ப வகுப்புகளுக்கும் பல ஆண்டுகளாக பியானோ வாசித்து சேவையும் செய்தார். ஏப்ரல் 2015ல் ஜானை சந்திக்கும் சிலாக்கியம் பெற்றேன், அச்சந்திப்பில் அவரது அன்பை போனிக்கு தெரிவிக்க சிறந்த வழி அவளை ஆலயத்துக்கு அழைத்துச் செல்வதுதான் என கலந்துரையாடினோம், ஆனால் அவர் ஞானஸ்நானம் பெறாவிட்டால் அது நடக்க முடியாது.

39 ஆண்டுகளாக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு வந்த பிறகு, ஜான் 2015ல் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குப் பிறகு அவள் தன் சொந்த தரிப்பித்தலைப் பெற்று 20 ஆண்டுகளுக்குப் பின், ஜானும் போனியும் மெம்பிஸ் டென்னஸி ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டனர். அவர்களது 47 வயது மகன் ராபர்ட் தனது அப்பாவைப்பற்றி சொன்னார், “ஆசாரியத்துவத்தைப் பெற்ற பிறகு அப்பா உண்மையாகவே ஜொலிக்கிறார்.” போனி சொன்னார், “ஜான் எப்போதுமே மகிழ்ச்சியும் உற்சாகமுமுடைய நபர், ஆனால் நியமங்களைப் பெற்றதும் தன் உடன்படிக்கைகளை கனம்பண்ணியதும், அவரது மென்மையை கூட்டியிருக்கிறது.”

கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியும் அவரது உதாரணமும்

அநேக ஆண்டுகளுக்கு முன் தலைவர் பாய்ட் கே. பாக்கர் எச்சரித்தார், “சுவிசேஷ நியமங்கள் இல்லாத நன்னடத்தை மனுக்குலத்தை மீட்கவோ, மேன்மைப் படுத்தவோ செய்யாது.” 5 உண்மையில் நமது பிதாவிடம் திரும்ப வர நமக்கு நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மட்டும் போதாது, ஆனால் நமக்கு அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், அவரது பாவ நிவர்த்தியும் தேவை.

கிறிஸ்துவின் நாமத்தினாலும், மூலமுமே, மனுஷ குமாரர்களுக்கு இரட்சிப்பு வர முடியும் என பென்யமின் இராஜா போதித்தான். (மோசியா 3:17; மற்றும் விசுவாசப் பிரமாணங்கள் 1:3 பார்க்கவும்).

அவரது பாவநிவர்த்தி மூலம், இயேசு கிறிஸ்து நம்மை ஆதாமின் வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து மீட்டார் மற்றும் நமது மனந்திரும்புதலையும் அப்படியே மேன்மைப்படுதலையும் சாத்தியமாக்கினார். அவரது வாழ்க்கை மூலம் நாம் இரட்சிக்கும் நியமங்களைப் பெற அவர் உதாரணம் ஏற்படுத்தினார், அதில் “தேவதன்மையின் வல்லமை வெளிப்பட்டது.” (கோ.உ 84:20).

“எல்லா நீதியையும் நிறைவேற்ற”, இரட்சகர் ஞானஸ்நான நியமத்தைப் பெற்ற பிறகு, ( 2 நெப்பி 31:5–6 பார்க்கவும்) சாத்தான் அவரை சோதித்தான். அதுபோல நமது சோதனைகள் ஞானஸ்நானம் அல்லது முத்திரித்தலுக்குப் பிறகு முடிவதில்லை, ஆனால் பரிசுத்த நியமங்களைப் பெறுவதும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகளையும் கனம்பண்ணுவதும் நம்மை அற்புதமான ஒளியால் நிரப்பி சோதனைகளை எதிர்க்கவும் மேற்கொள்ளவும் நமக்கு பெலன் அளிக்கிறது.

எச்சரிக்கை

பிற்காலத்தில் ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னான், தேசம் தீட்டுப்பட்டது ... கட்டளையை மாறுபாடாக்கினார்கள் (ஏசாயா 24:5; மேலும் கோ.உ 1:15 பார்க்கவும்).

அதுபோன்ற எச்சரிக்கை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்பட்டது, சிலர் [கர்த்தரிடத்தில்] “தங்கள் உதடுகளால் நெருங்குகிறார்கள்,... [மற்றும்] ஒரு விதமான தேவதன்மையுடன், மனுஷரின் கட்டளைகளின் கோட்பாடுகளை போதிக்கிறார்கள், ஆனால் அதன் வல்லமைகளை மறுக்கிறார்கள்” (ஜோசப் ஸ்மித்---வரலாறு 1:19).

அநேகர், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என பவுலும் எச்சரித்தான்.( 2 தீமோத்தேயு 3:5). அந்த திரும்புதலிலிருந்து நான் மீண்டும் சொல்லுகிறேன்.

வாழ்க்கையின் பல கவனச்சிதறல்களும் சோதனைகளும் “பட்சிக்கிற ஓநாய்கள்” போன்றவை (மத்தேயு 7:15). ஓநாய்கள் நெருங்கும்போது, உண்மையான மேய்ப்பன் ஆடுகளை ஆயத்தம் செய்து, பாதுகாத்து, எச்சரிப்பான். (யோவான் 10:12 பார்க்கவும்). நல்ல மேய்ப்பனின் பரிபூரண ஜீவியத்தை போல வாழ மேய்ப்பர்கள் முயலும்போது நாம் நமது மற்றும் பிறரது ஆத்துமாக்களுக்கும் மேய்ப்பர்கள் இல்லையா? தற்போது நாம் ஆதரித்த தீர்க்கதரிசிகள், ஞானதிருதிஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களின் ஆலோசனையுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் வரத்தாலும் நாம் கவனமாக ஆயத்தப்பட்டிருந்தால், ஓநாய்கள் வருவதை நாம் பார்க்கலாம். மாறாக நாம் நமது ஆத்துமாக்களுக்கும் பிறரது ஆத்துமாக்களுக்கும் மந்தமான மேய்ப்பர்களாக இருந்தால், விபத்துக்கள் நேரிடலாம். மந்தம் விபத்துக்கு நடத்துகிறது. நம் ஒவ்வொருவரையும் உண்மையான மேயப்பர்களாக இருக்க நான் அழைக்கிறேன்.

அனுபவமும் சாட்சியும்

பாதையில் தரித்திருக்க உதவுகிற திருவிருந்து ஒரு நியமம், தகுதியுடன் பங்கேற்பது அனைத்து பிற நியமங்களுக்கு தொடர்புடைய உடன்படிக்கைகளை காத்துக் கொள்வதற்கு ஆதாரமாகும். சில வருடங்களுக்கு முன்பு என் மனைவி அனிதாவும் நானும் அர்க்கன்ஸாஸ் லிட்டில் ராக் ஊழியத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, இரண்டு இளம் ஊழியக்காரர்களுடன் நான் போதிக்க சென்றேன். பாடத்தின்போது, நாங்கள் கற்பித்துக் கொண்டிருந்த நல்ல சகோதரன் சொன்னார், “நான் உங்கள் சபைக்கு வந்திருக்கிறேன், ஒவ்வொரு ஞாயிறும் ஏன் அப்பம் தின்று, தண்ணீர் அருந்த வேண்டும்? எங்கள் சபையில் நாங்கள் ஆண்டுக்கு இருமுறை, ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் அன்று செய்கிறோம், அதில் அர்த்தம் இருக்கிறது.”

“அப்பத்திலும் திராட்சைரசத்திலும் பங்கேற்க ஒன்றாகக் கூட நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்” என அவருடன் பகிர்ந்து கொண்டோம். (மரோனி 6:6; மற்றும் கோ.உ 20:75ம் பார்க்கவும்). (மத்தேயு 26ம், 3 நெப்பி 18)ம் நாங்கள் சத்தமாக வாசித்தோம். அவர் இன்னும் அதன் அவசியத்தை பார்க்கவில்லை என பதிலளித்தார்.

பின்பு நாங்கள் பின்வரும் ஒப்பீட்டை பகிர்ந்தோம், “ஒரு பயங்கர கார் விபத்தில் நீங்கள் மாட்டிக் கொண்டதாக கற்பனை செய்யுங்கள். நீங்கள் காயம்பட்டு நினைவின்றி இருக்கிறீர்கள். ஒருவர் அருகில் வந்து நீங்கள் நினைவில்லாமல் இருக்கிறீர்கள் என கண்டு, அவசர எண் 911ஐ அழைக்கிறார். நீங்கள் கவனிக்கப்பட்டு நினைவு பெறுகிறீர்கள்.”

அச்சகோதரனிடம் நாங்கள் கேட்டோம், நீங்கள் உங்கள் சுற்றுப்புறத்தை அடையாளம் காணும்போது உங்களிடம் என்ன கேள்விகள் இருக்கும்?

அவர் சொன்னார், “நான் அங்கு எப்படி வந்தேன், யார் என்னைக் கண்டு பிடித்தார்கள் என அறிய விரும்புவேன். அவர் என் உயிரை காப்பாற்றியதால் அவருக்கு தினமும் நன்றி சொல்ல விரும்புவேன்.”

இரட்சகர் எப்படி நமது உயிரை காப்பாற்றினார், நாம் எப்படி தினமும், தினமும், தினமும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அந்த நல்ல சகோதரரிடம் சொன்னோம்!

பின்பு நாங்கள் கேட்டோம், “உங்களுக்காகவும் எங்களுக்காகவும் அவர் தன் ஜீவனைக் கொடுத்தார் என அறிந்து அவரது சரீரம் மற்றும் ரத்தத்தின் அடையாளங்களாக எப்போதெல்லாம் அப்பத்தை சாப்பிடவும் தண்ணீரை குடிக்கவும் விரும்புவீர்கள்?”

அவர் சொன்னார், “புரிந்தது, இன்னொரு காரியம். உங்கள் சபை எங்களது போலில்லை.”

அதற்கு நாங்கள் பதிலளித்தோம், உங்கள் வாசல் வழியே இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நடந்து வந்தால் என்ன செய்வீர்கள்?”

அவர் சொன்னார், “உடனே நான் என் முழங்காலில் நிற்பேன்.”

நாங்கள் கேட்டோம், “பிற்காலப் பரிசுத்தவான்கள் ஆராதிக்குமிடங்களுக்குள் நீங்கள் நடக்கும்போது, அதையே நீங்கள் உணர்வதில்லையா, இரட்சகர் மீது பயபக்தி?”

அவர் சொன்னார், “புரிந்தது, புரிந்தது!”

அந்த ஈஸ்டர் ஞாயிறில் அவர் சபைக்கு வந்தார், திரும்பவும் வந்து கொண்டிருந்தார்.

நம் ஒவ்வொருவரையும் நம்மையே கேட்க அழைக்கிறேன், “திருவிருந்து உள்ளிட்ட எந்த நியமங்களை நான் பெற வேண்டும், நான் எந்த உடன்படிக்கைகளை செய்து, காத்துக்கொண்டு, கனம்பண்ண வேண்டும்?” நியமங்களில் பங்கேற்பதுவும், அது சார்ந்த உடன்படிக்கைகளை கனம் பண்ணுவதும் அற்புதமான ஒளியையும் இருண்டு கொண்டிருக்கும் உலகத்தில் பாதுகாப்பும் கொண்டு வரும் என நான் வாக்குத்தத்தம் செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 414.

  2. True to the Faith: A Gospel Reference (2004), 109; see also Handbook 2: Administering the Church (2010), 2.1.2.

  3. David A. Bednar, “Always Retain a Remission of Your Sins,” Liahona, May 2016, 60.

  4. Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7.

  5. Boyd K. Packer, “The Only True Church,” Ensign, Nov. 1985, 82.

அச்சிடவும்