வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103


பாகம் 103

பிப்ருவரி 24, 1834ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பரிசுத்தவான்களின் நிவாரணத்திற்காகவும் ஜாக்சன் மாகாணத்திலுள்ள அவர்களுடைய இடங்களில் மறுகுடியேறுவதைப்பற்றியும் தீர்க்கதரிசியுடன் ஆலோசனை செய்ய பார்லி பி. பிராட்டும், லைமன் விட்டும், மிசௌரியிலிருந்து ஒஹாயோவின் கர்த்லாந்திற்கு வந்தடைந்த பின்னர் இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது.

1–4, ஜாக்சன் மாகாணத்திலுள்ள பரிசுத்தவான்கள் துன்புறுத்தப்பட கர்த்தர் ஏன் அனுமதித்தார்; 5–10, பரிசுத்தவான்கள் கட்டளைகளைக் கைக்கொண்டால் அவர்கள் மேற்கொள்ளுவார்கள்; 11–20, சீயோனின் மீட்பு வல்லமையால் வரும், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு முன்பாகப் போவார்; 21–28, பரிசுத்தவான்கள் சீயோனில் கூடிவர வேண்டும், தங்களுடைய ஜீவன்களைக் கொடுத்தவர்கள் மீண்டும் அவைகளைக் காண்பார்கள்; 29–40, சீயோனின் முகாமை ஸ்தாபிக்கவும் சீயோனுக்குப் போகவும் வெவ்வேறு சகோதரர்கள் அழைக்கப்பட்டார்கள்; அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால் அவர்களுக்கு ஜெயம் வாக்களிக்கப்பட்டது.

1 என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதோ, சீயோனின் தேசத்தில் சிதறடிக்கப்பட்ட உங்களுடைய சகோதரர்களின் இரட்சிப்பையும் மீட்பையும் குறித்து உங்களுடைய கடமைகளை ஆற்றுவதில் எவ்வாறு நீங்கள் செயல்பட வேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக ஒரு வெளிப்படுத்தலையும் கட்டளையையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்;

2 என்னுடைய சத்துருக்களின் கைகளால் விரட்டப்பட்டு அடிக்கப்பட்டதால், என்னுடைய சத்துருக்களின் மேல் என்னுடைய ஏற்ற காலத்தில் என்னுடைய கோபத்தை அளவில்லாமல் ஊற்றுவேன்.

3 ஏனெனில், அவர்களின் அக்கிரமங்களின் அளவை அவர்கள் நிரப்பும்படியாகவும், அவர்களுடைய பாத்திரம் நிரம்பியிருக்கும்படியாகவும் அவர்களை இம்மட்டில் அனுமதித்தேன்;

4 என்னுடைய நாமத்தால் தங்களை அழைக்கிறவர்கள் கொஞ்சக் காலத்திற்கு ஒரு கொடிய மற்றும் தீங்கான தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள், ஏனெனில் நான் அவர்களுக்குக் கொடுத்த நெறிகளுக்கும் கட்டளைகளுக்கும் அவர்கள் முற்றிலுமாக செவி கொடுக்கவில்லை.

5 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் அவர்களுக்குக் கொடுக்கிற ஆலோசனைக்கு இந்த மணிநேரத்திலிருந்து அவர்கள் செவிகொடுக்கிற அளவில் என்னுடைய ஜனங்கள் உணர்ந்துகொள்ளும்படியாக ஒரு கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன்.

6 இதோ, அதை நான் கட்டளையிட்டதால் அவர்கள் இந்த மணிநேரத்திலிருந்து என்னுடைய சத்துருக்களை எதிர்த்து மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

7 அவர்களுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் அவர்களிடத்தில் பேசுகிற சகல வார்த்தைகளையும் ஆசரிக்க செவிகொடுப்பதில், உலகத்தின் ராஜ்யங்கள் என்னுடைய பாதங்களுக்கு அடியில் கீழ்ப்படுத்தப்படும் வரையும், பூமி பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும்வரை, அதை என்றென்றைக்கும் சுதந்தரித்துக் கொள்வதில் அவர்கள் மேற்கொள்வது ஒருபோதும் நிற்பதில்லை.

8 ஆனால் அவர்கள் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என்னுடைய வார்த்தைகள் அனைத்தையும் கைக்கொள்ள செவிகொடுக்காதிருக்கிற அளவில், உலகத்தின் ராஜ்யங்கள் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளும்.

9 ஏனெனில் உலகத்திற்கு ஒளியாகவும், மனுஷர்களின் இரட்சகர்களாகவும் இருக்க அவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள்;

10 அவர்கள் மனுஷர்களின் இரட்சகர்களாயில்லாதிருக்கிற அளவில் அவர்கள் ஒன்றுக்கும் உதவாத, வெளியே எறியப்படுவதற்கும், மனுஷர்களின் காலால் மிதிபடவும், சாரமற்றுப்போன உப்புக்கு அவர்கள் ஒப்பாயிருக்கிறார்கள்.

11 ஆனால் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சிதறடிக்கப்பட்ட உங்களுடைய சகோதரர் தங்களுடைய சுதந்தரத்தின் தேசங்களுக்கு திரும்ப வந்து சீயோனின் பாழாய்ப்போன நிலங்களிலே கட்டும்படியாக நான் கட்டளையிட்டிருக்கிறேன்.

12 ஏனெனில், அநேக உபத்திரவங்களுக்குப் பின், முந்தைய கட்டளையில் நான் உங்களுக்குச் சொன்னதைப்போல ஆசீர்வாதம் வருகிறது.

13 இதோ, உங்களுடைய உபத்திரவங்களுக்கும், உங்களுடைய சகோதரரின் உபத்திரவங்களுக்கும் பின்னர், உங்களுடைய மீட்பும் மற்றும், உங்களுடைய சகோதரரின் மீட்பும், அவர்கள் நிலைநிறுத்தப்படவும், இனி ஒருபோதும் கீழே தள்ளப்படாமலிருக்கவும், சீயோன் தேசத்திற்கு அவர்களுடைய திரும்ப வருதலும்கூட, நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதமாகும்.

14 ஆயினும், அவர்களுடைய சுதந்தரங்களை அவர்கள் தீட்டுப்படுத்தினால் அவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய சுதந்தரங்களை தீட்டுப்படுத்தினால் அவர்களை நான் விடுவதில்லை.

15 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சீயோனின் மீட்பு வல்லமையினாலேயே வரவேண்டியது அவசியம்;

16 ஆகவே, என்னுடைய ஜனங்களுக்கு ஒரு மனுஷனை நான் எழுப்புவேன், இஸ்ரவேல் ஜனங்களை மோசே வழிநடத்தியதைப்போல அவர்களை அவன் வழிநடத்துவான்.

17 ஏனெனில் நீங்கள் இஸ்ரவேலின் பிள்ளைகள், ஆபிரகாமின் சந்ததி, மேலும் நீங்கள் வல்லமையினாலும், நீட்டப்பட்ட கரத்தாலும் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வழிநடத்தப்பட வேண்டும்.

18 முதலில் உங்களுடைய பிதாக்கள் வழிநடத்தப்பட்டதைப்போலவே, சீயோனின் மீட்புமிருக்கும்.

19 ஆகவே, உங்கள் இருதயம் துவளாதிருப்பதாக, ஏனெனில் உங்களுக்கு முன்பாக என்னுடைய தூதன் போவான், ஆனால் என்னுடைய பிரசன்னம் செல்லாது என, நான் உங்களுடைய பிதாக்களுக்குச் சொன்னதைப்போல, உங்களுக்கு சொல்வதில்லை.

20 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுக்கு முன்பாக என்னுடைய தூதர்கள் போவார்கள், என்னுடைய பிரசன்னம் செல்லும், ஏற்ற காலத்தில் நன்மையான தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

21 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கொடுத்த உவமையில் பேசப்படுகிற கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தின் வேலைக்காரனுக்கு நான் ஒப்பிடுகிற மனுஷனே என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவர்.

22 ஆகவே என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவர் என்னுடைய வீட்டின் அனைவருக்கும் சொல்வானாக, என்னுடைய இளம் வாலிபரே, நடுத்தர வயதினரே, எனக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்ட பணத்தைக் கொடுத்து நான் வாங்கிய தேசமாகிய, சீயோன் தேசத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்.

23 சகல சபைகளும் தங்களுடைய பணத்துடன் புத்திசாலியான மனுஷர்களை அனுப்பி, நான் அவர்களுக்கு கட்டளையிட்டதைப்போல நிலங்களை வாங்குவார்களாக.

24 சீயோன் தேசமாயிருக்க நான் பரிசுத்தப்படுத்திய என்னுடைய நன்மையான தேசத்திலிருந்தும், இந்த சாட்சிகளுக்குப் பின்னர் அவர்களுக்கு எதிராக எனக்கு முன்பாக நீங்கள் வாங்கின உங்களுடைய சொந்த நிலங்களிலிருந்தும் உங்களை விரட்ட உங்களுக்கு எதிராக என்னுடைய சத்துருக்கள் வருகிற அளவில் நீங்கள் அவர்களை சபிப்பீர்களாக.

25 நீங்கள் யாரையெல்லாம் சபிக்கிறீர்களோ, அவர்களை நான் சபிப்பேன், என்னுடைய சத்துருக்களை நீங்கள் பழிக்குப்பழி வாங்குவீர்கள்.

26 என்னை வெறுக்கிற என்னுடைய சத்துருக்களை அவர்களுடைய மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையிலும் நீங்கள் பழிக்குப்பழி வாங்கும் போதும் கூட என்னுடைய பிரசன்னம் உங்களோடிருக்கும்.

27 என்னிமித்தமாக தன்னுடைய ஜீவனை விடுவதற்கு எந்த மனுஷனும் பயப்படாதிருப்பானாக; ஏனெனில் எனக்காக, தன்னுடைய ஜீவனைக் கொடுக்கிறவன், அதை மீண்டும் கண்டடைவான்.

28 என்னிமித்தமாக தன்னுடைய ஜீவனை விடுவதற்கு மனதில்லாதவன் என்னுடைய சீஷனில்லை.

29 சீயோனின் மறுஸ்தாபிதத்தையும் மீட்பையும் குறித்து நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளைக் கைக்கொள்ள சபைகளை ஆயத்தப்படுத்துவதில் என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன் கிழக்கு தேசங்களிலுள்ள சபைகளில் தன்னுடைய குரலை உயர்த்துவது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

30 என்னுடைய வீட்டின் ஜனங்கள் பத்து பேர்களாக, அல்லது இருபது பேர்களாக, அல்லது ஐம்பது பேர்களாக, அல்லது நூறு பேர்களாக, ஐநூறு பேரை அவர்கள் சேர்க்கும்வரை, சீயோன் தேசத்திற்கு போக குழுக்களை அவர்கள் சேர்க்கும்வரை என்னுடைய ஊழியக்காரனாகிய பார்லி பி. பிராட்டும் என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் விட்டும் தங்களுடைய சகோதரரின் தேசத்திற்கு திரும்பக்கூடாதென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

31 இதோ, இது என்னுடைய சித்தமாயிருக்கிறது; கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; ஆனால் மனுஷர்கள் என்னுடைய சித்தத்தின்படி எப்போதும் செய்வதில்லை.

32 ஆகவே, உங்களால் ஐநூறு பேரை சேர்க்க முடியவில்லையென்றால், கூடுமானவரை நீங்கள் முன்னூறு பேரை சேர்க்க கருத்தாய் நாடுங்கள்.

33 உங்களால் முன்னூறுபேரை சேர்க்க முடியவில்லையென்றால் கூடுமானவரை நீங்கள் நூறு பேரை சேர்க்க கருத்தாய் நாடுங்கள்.

34 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடன் சீயோன் தேசத்திற்கு போக என்னுடைய வீட்டின் எண்ணிக்கைக்கு நூறுபேரை நீங்கள் சேர்க்கும் வரை, சீயோன் தேசத்திற்கு நீங்கள் போகக் கூடாதென நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

35 ஆகவே, நான் உங்களுக்குச் சொன்னதைப்போல, கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; கூடுமானவரை என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் உங்களுடன் வந்து, உங்களின் மத்தியில் தலைமை தாங்கி, பரிசுத்தமாக்கப்பட்ட தேசத்தின் மேலே என்னுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படப்போகிற நியாயப்பிரமாணங்கள் மற்றும் கட்டளைகளின்படி சீயோனின் பிள்ளைகளை நிலைநிறுத்த கருத்தாய் ஜெபியுங்கள்.

36 உங்களுடைய சிரத்தை, நேர்மை, மற்றும் விசுவாசத்தின் ஜெபங்கள் மூலமாக சகல ஜெயமும் மகிமையும் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

37 என்னுடைய ஊழியக்காரனாகிய பார்லி பி. பிராட், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுடன் பயணம் செய்வானாக.

38 என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் விட், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுடன் பயணம் செய்வானாக.

39 என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித், என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூடன் பயணம் செய்வானாக.

40 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறபடி, என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் ஹைட், என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் பிராட்டுடன், உங்களுக்கு நான் கொடுத்த இந்த கட்டளைகளை நிறைவேற்ற பயணம் செய்வானாக, மீதியை என்னுடைய கைகளில் விட்டுவிடுவானாக. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

அச்சிடவும்