வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 96


பாகம் 96

கர்த்லாந்திலுள்ள பரிசுத்தவான்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஜூன் 4, 1833ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் சீயோனின் பட்டணம் அல்லது பிணையத்தின் அமைப்பைக் காட்டி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். அந்த தருணம் பிரதான ஆசாரியர்களின் மாநாடு, கர்த்லாந்திற்கருகில் சபைக்குச் சொந்தமான பிரெஞ்ச் பண்ணை என்றறியப்பட்ட குறிப்பிட்ட நிலங்களை விற்பனை செய்வதைப்பற்றி ஆலோசிப்பது முக்கியமானதாயிருந்தது. பண்ணைக்கு யார் பொறுப்பேற்பது என்பதைக் குறித்து மாநாடு ஏற்றுக்கொள்ளாததால் அந்தக் காரியத்தைக் குறித்து கர்த்தரிடம் விசாரிக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

1, சீயோனின் கர்த்லாந்து பிணையம் பலப்படுத்தப்படவேண்டும்; 2–5, பரிசுத்தவான்களுக்காக ஆயர் சுதந்தரங்களைப் பிரிக்கவேண்டும்; 6–9, ஒருங்கிணைந்த அமைப்பில் ஜான் ஜான்சன் ஒரு அங்கத்தினராயிருக்கவேண்டும்.

1 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஞானம் இதிலே விளங்கும், அதிலிருந்து இந்த காரியத்தைக் குறித்து எவ்வாறு செயல்பட வேண்டுமென நீங்கள் அறிந்து கொள்வீர்கள், ஏனெனில், சீயோனின் பலத்திற்காக நான் அமைத்த இந்த பிணையம் பலப்படுத்தப்பட வேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது.

2 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னி, என்னுடைய பரிசுத்த ஜெபஆலயத்தைக் கட்ட நான் திட்டமிட்ட, உங்களுக்கு மத்தியிலே பெயரிடப்பட்ட இடத்திற்கு பொறுப்பெடுத்துக்கொள்வானாக.

3 மீண்டும், உங்களுக்குள்ளே ஆலோசனையில் தீர்மானிக்கப்பட இருப்பதைப்போல, சுதந்தரங்களை நாடுகிறவர்களின் பலனுக்காக, ஞானத்தின்படி அது பாகங்களாகப் பிரிக்கப்படுவதாக.

4 ஆகவே, இந்தக் காரியத்தையும், மனுபுத்திரர்களுக்கு என்னுடைய வார்த்தையைக் கொண்டுபோவதின் நோக்கத்திற்காக என்னுடைய அமைப்பிற்கு அது பயனாயிருக்கும்படியாக இந்தப் பாகத்தையும் குறித்து நீங்கள் கவனமாயிருங்கள்.

5 ஏனெனில் இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களின் நன்மைக்காக மனுபுத்திரர்களின் இருதயங்களை மென்மையாக்குவதின் நோக்கத்திற்காக, மனுபுத்திரர்களுக்கு என்னுடைய வார்த்தை போக வேண்டுமென்பது எனக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

6 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதுவே என் ஞானமாயும் அவசியமாயுமிருக்கிறது. அவனுடைய காணிக்கையை நான் ஏற்றுக்கொண்ட, அவனுடைய ஜெபங்களை நான் கேட்ட, இப்போதிலிருந்து என்னுடைய கட்டளைகளை கைக்கொள்ளுகிற அளவில் நித்திய ஜீவனின் வாக்குத்தத்தத்தை அவனுக்கு நான் கொடுக்கிற, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஜான்சன்,

7 மற்றும் அவன் யோசேப்பின் சந்ததியும் அவனுடைய பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதங்களின் பங்காளியுமாயிருப்பதால்,

8 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுபுத்திரர்களுக்கு என்னுடைய வார்த்தையைக் கொண்டுபோவதில் அவன் உதவியாயிருக்க, அமைப்பின் ஒரு அங்கத்தினராக வேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது.

9 ஆகவே இந்த ஆசீர்வாதத்திற்கு நீங்கள் அவனை நியமனம் செய்ய வேண்டும், அவன் அங்கே வாசம் செய்யும்படிக்கு உங்களுக்கு மத்தியிலே குறிப்பிடப்பட்ட ஜெப வீட்டின் மேலுள்ள வில்லங்கங்களை அகற்ற அவன் கருத்தாய் நாடவேண்டும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

அச்சிடவும்